மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக வெளியிட்டிருந்த விண்டோஸ் 10 பதிப்பானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
புதிய அம்சங்கள், சிறந்த பயனர் இடைமுகம் என புதிய பரிணாமத்துடன் வெளியான இவ் இயங்குதளத்தினை உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றார்கள்.
பல்வேறு நிறுவனங்களும் இயங்குதளங்களை அறிமுகம் செய்துள்ள நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமானது தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.
இந்நிலையில் புதிய புள்ளி விபரம் ஒன்றினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சுமார் 500 மில்லியன் கணனி பாவனையாளர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பயன்படுத்தி வருவதாக அந்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த புள்ளிவிபரத்தில் நாள் தோறும் 400 மில்லியன் வரையானவர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இப் புள்ளிவிபரம் வெளியிடப்பட்டு 8 மாதங்களின் பின்னர் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலேயே 500 மில்லியன் வரையானவர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தினை தமது கணனியில் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுகிய கால வளர்ச்சியானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகின்றது.