இலங்கைக்கெதிரான ஐ.நா தீர்மானம்! துப்பாக்கி வேட்டுக்களால் மக்களை அச்சுறுத்திய படையினர்:
ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி நகரிலும், அக்கராயன் பகுதியிலும் இளைஞர்கள் வெடி கொழுத்தி மகிழ்ந்துள்ளதுடன், மக்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் துப்பாக்கி வேட்டுக்களையும் தீர்த்துள்ளனர்.
கிளிநொச்சி நகரில் தொடர்ச்சியான பட்டாசுகளை கொழுத்திவிட்டு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், பட்டாசு சுமார் 10நிமிடங்கள் தொடர்ச்சியாக வெடித்துள்ளது.
இதேபோன்று, அக்கராயன் பகுதியிலும் இளைஞர்கள் பட்டாசு கொழுத்தி எறிந்துள்ளனர். இதனையடுத்து, பட்டாசுகொழுத்தி எறிந்தவர்களை துரத்திச் சென்ற படையினர் மக்களை அச்சுறுத்தும் வகையில், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இதனால் இந்தப் பகுதியில் இரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி நகரில் நேற்றிரவு 7மணி தொடக்கம் வழக்கத்திற்கு மாறான இராணுவத்தினரின் நடமாட்டமும், வீதிச் சோதனைகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், யாழ்ப்பாணத்தில் அதிகமான இராணுவத்தினர் நடமாட்டம் இருந்தபோதும் அசம்பாவிதங்கள் எவையும் ஏற்படவில்லை.