தந்தையின் மரணத்திற்கு துமிந்தவே காரணம்! எதிர்காலத்தில் அரசியலில் குதிக்கவுள்ளேன்! ஹிருணிகா
தமது தந்தையின் கொலை வழக்கு நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மீதான சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் பின்னர், அவருக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து விட்டு தாம் அரசியல் பிரவேசம் செய்யவுள்ளதாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹிருணிகா குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது மக்கள் கட்சியுடனோ இணைந்தே தாம் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமது தந்தையான பாரதவின் மரணத்திற்கு, துமிந்த சில்வாவே பிரதான காரண கர்த்தா என்றும் அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, தற்போதைய நிலையில். தாம் அரசியலில் இறங்குவது தமக்கு பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கும் என்றும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தமது தந்தையை கொல்வதற்கு எதிர்கட்சிகளாக ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி என்பவற்றின் சதித்திட்டங்கள் முன்னர் செயற்படுத்தப்பட்டன.
இருந்தபோதும், அவர் துர்அதிர்ஷ்ட வசமாக சொந்த கட்சியில் உள்ள ஒருவராலேயே கொல்லப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
தாம் நீதிமன்ற உத்தரவு வரும் வரையிலும் காத்திருப்பதாகவும், அதன் பின்னர் தமது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசியல் எந்த நோக்கத்துடன் களமிறங்குவது என்பது குறித்து அதைத் தொடர்ந்தே தீர்மானிக்கவுள்ளதாகவும், ஹிருணிகா பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர தெரிவித்துள்ளார்..