இலங்கையில் சிறுபான்மையினர் என்று யாருமே இல்லை.சிறுபான்மைப் பிரச்சினை என்று தீர்ப்பதற்கு எதுவும் இல்லை, உள்ள பிரச்சினை மக்களின் வாழ்வாதார பொருளாதார அபிவிருத்திப் பிரச்சினை தான் என்று கூறி வருகிறார்.
இதன் மூலம் அவர் சொல்வது என்னவென்றால் தமிழர் என்று யாருமே இருக்காமல் அவர்கள் பெரும்பான்மை இனத்தவரோடு கலந்து கரைந்து இலங்கை ஒரு சிங்களப் பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்பதே.
அதைச் சாதிக்க வேண்டுமானால் தமிழர் தாயகம் என்று ஒன்று இருக்கக் கூடாது. தமிழ் மொழியோ அவர்களது மதமோ அரச அங்கீகாரம் பெறக் கூடாது. தேசீய இன உணர்வுள்ள தமிழர் இருக்கக் கூடாது. அதைச் சாதிக்க தமிழரிடம் பொருளாதார பலம் இருக்கக் கூடாது.
இவற்றைச் சாதிப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் தான் அவர் செயற்படுகிறார். அவரது அரசு தாக்கும் நிலையிலும் தமிழர் தடுக்கும் நிலையிலும் உள்ளோம். அவருக்குத் தடையாக இருப்போர்
1.அவரது ஊழல் சர்வாதிகார குடும்ப ஆட்சியை எதிர்க்கும் சிங்கள எதிர்க்கட்சிகளும் மக்களும்.
2 .கௌரவமாக வாழ விரும்பும் தமிழர் தரப்பு
3 . தத் தம் வல்லாதிக்கத்தை பொருளாதார நலன்களை தக்க வைக்க விரும்பும் சர்வதேசம்.
முதலிரண்டு பகுதியினரையும் ஆயுதப் படை துணைப் படைகளின் உதவியோடு தமது சர்வாதிகார அதிபர் பதவியால் நசுக்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சர்வதேச வல்லாதிக்கப் போட்டியில் சீனச் சார்பாக இலங்கை இருப்பதை சகிக்க முடியாத மேற்குலகம் இலங்கையை தமது வழிக்குக் கொண்டுவர, இலங்கை தமிழருக் கெதிராகச் செய்த செய்கின்ற அட்டூழியங்களை மனித உரிமை மீறல்களை இலங்கைக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.
அதன் முதற்படியாக இலங்கை தானே பெற்றெடுத்த LLRC பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்தும்படி இலங்கையின் கழுத்தை நெரிக்கிறது. நல்லிணக்கமாக அரசியல் தீர்வை வழங்கும் படி அழுத்தம் கொடுக்கிறது.
மேற்குலகை முற்றிலும் பகைக்க முடியாத மகிந்த ஒரு அரசியல் தீர்வைக் கொடுத்து விட்டதாகக் காட்டுவதற்கான அவரது நிகழ்ச்சி நிரலின் முதற்படியே கிழக்கு மாகாணத் தேர்தலாகும்.
அதனாற்தான் சென்ற வருடமே நடத்த வேண்டிய வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அடுத்த வருடம் நடக்க வேண்டிய கிழக்கு மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துகிறார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று தமக்குச் சாதகமான ஆட்சி அமைப்பதன் மூலம் மகிந்த ராசபக்ச சாதிக்க விரும்புவது
1 . கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் தனது குடும்ப ஆட்சிக்கும் கொள்கைக்கும் ஆதரவாக இருகிறார்கள் என்பதை பன்னாட்டு சமூகத்துக்கு எண்பிப்பது.
2 .அதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் வட கிழக்கு இணைப்பையும் காணி, பொலிஸ் அதிகாரங்களையும் நிராகரித்து விட்டார்கள் என்று காட்டுவது.
3 . மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பகிரப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மீளப்பெற்று ஒன்றுமே இல்லாத வெறும் பெயரளவிலான மாகாண சபைகளாக அவற்றை ஆக்குவது.
4.வடமாகாணத்திலும் கணிசமான சிங்களக் குடியேற்றங்களாலும் தமிழரை விலைக்கு வாங்குவதாலும் தமிழ்ப் பெரும்பான்மையைக் குறைத்து ஆயுத படைப் பலத்தோடும் ஏற்கனவே கிழக்கில் பெற்ற வெற்றிகளின் செல்வாக்கோடும் வடக்கு மாகாணத்திலும் அரசிற்குச் சாதகமான மாகாண சபையை உருவாக்கல். என்பனவாகும்.
அத்துடன் LLRC பரிந்துரைகளை நிறைவேற்றும் திட்டம் தயார் என்றும் ஆனால் அதற்கு மூன்று வருடகால அவகாசம் வேண்டுமென்றும் கேட்டிருப்பது இந்த வட மாகாண சபைத் திட்டத்தைச் செயற்படுத்த மூன்று வருட கால அவகாசம் தேவை என்று அவர் கணக்கிடுகிறார் என்பது புலனாகும்.
எனவே மகிந்தவின் நிகழ்ச்சி நிரலின் முதற்படி தான் இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தல் என்பது வெள்ளிடை மலையாகும். கிழக்கு மாகாணத் தேர்தலில் அரச கட்சி வென்றால் பின்னர் மகிந்தவின் நிகழ்ச்சிநிரல் நிறைவேறுவதைத் தடுக்கவே முடியாது.
சர்வதேசமும் எதுவும் கேட்க வாய்ப்பில்லாமல் போகும். இலங்கையில் தமிழரின் இருப்பை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தலாகத் தான் இந்தத் தேர்தல் அமைகிறது. அதனாற்தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிக்குமாறு திரு இரா சம்பந்தன் தமிழ் பேசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனச் சிக்கலுக்கு மாகாண சபை தீர்வாக மாட்டாது என்பது ததேகூ இன் நிலைப்பாடாக இருந்தாலும் காணி மற்றும் காவற்றுறை அதிகாரம் எமது கையில் இருப்பது எமது மண் பறிக்கப்படுவதை ஓரளவேனும் தடுத்து நிறுத்த உதவும்.
அண்மையில் தனியார் காணிகளைப் பறிக்க நகர மற்றும் நாட்டுத் திட்ட சட்டத்தில் அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு ஒன்பது மாகாணங்களின் சம்மதம் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிள்ளையானின் கிழக்கு மாகாண சபை சம்மதம் கொடுக்க வட மத்திய மாகாணம் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டது. அதனாற்தான் அதற்கும் இப்போது தேர்தல் நடக்கிறது.எப்பாடு பட்டாலும் கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் அரசு தனக்குள்ள அதிகாரம், பொருள்வளம், ஆட்பலம் எனச் சகல வளங்களையும் பயன்படுத்துகிறது.
ததேகூ வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்தல், 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கல், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கல், அடிக்கல் நாட்டல்,வேலை வாய்ப்பு தரப்படும் என ஆசை வார்த்தை பேசுதல் போன்ற தேர்தல் முறைகேடுகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதடிப்பதற்கு பல சுயேட்சைக் குழுக்களையும் அரசு களமிறக்கியுள்ளது.
தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ததேகூ இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வது தமிழ் வாக்காளர்களது அத்தியாவசிய கடமையாகும்.
ததேகூ வெற்றிபெறும் போது அது தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கியதும் தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ததேகூ இன் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.
இணைப்பாட்சி அடிப்படையில் தங்களைத் தாங்களே ஆளும் ஒரு அரசு உருவாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெறும். வட - கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாய்ப்பு ஏற்படும். வட - கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ள வழிவகுக்கும் வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு அமைய வேண்டும்.
அதனையே பன்னாட்டு சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ்மக்கள் ததேகூ இன் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
ததேகூ அரசோடு மோத விரும்பவில்லை. அதே சமயம் ஏமாற்றப்படவும் அர்த்தமற்ற முடிவுகளையோ தீர்வுகளையோ ஏற்றுக் கொள்ளவும் அதன் தலைமை தயாராக இல்லை. இதனை ததேகூ உள்நாட்டிலும் பன்னாட்டு சமூகத்துக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறது.
அதனை மெய்பிக்கும் பொறுப்பு கிழக்கு மாகாணத் தேர்தல் வெற்றியில் தங்கியிருக்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெறும் வெற்றி வலுவூட்டும்.
ததேகூ கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு கனடிய தமிழர்களது தோள்களிலும் உண்டு. மனிதவளம், பொருள்வளம் என்று வரும்போது அரசோடு ததேகூ போட்டி போட முடியாது.
இருந்தும் நாம் ததேகூ இன் கைகளை பல வழிகளில் பலப்படுத்தலாம். அதன் வெற்றிக்கு பாடுபடலாம். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சி இருக்கிறது.இந்த வரலாற்றுக் கடமையை உடனே செய்வோம்.
வின் மகாலிங்கம் - கனடா.