கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள 4 சதவீதமானவர்களுக்கே சட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து அரச பிரிவுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குற்ற வழக்குகள் தொடர்பில் சட்டம் செயற்படுத்தப்படும் வீதம் 75 எனவும் ஐரோப்பாவில் அது 85 வீதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் சேவை, அரச சேவை, சட்டம் ஆகியவற்றில் அதிகாரம் வாய்ந்தவர்களின் தலையீடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திறமைவாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அரச ஊழியர்கள் இருந்தும் அரசியல் பலத்துடன் செயற்படும் நபர்களுக்கு பதவி உயர்வு, நியமனம் என்பவை வழங்கப்பட்டு முழு அரச சேவையும் வீணடிக்கப்பட்டுள்ளதாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.