முறிகண்டி பிள்ளையார் ஆலய வழக்கு தமிழ் நீதிபதிகளினால் விசாரணை! ஜனவரிக்கு ஒத்திவைப்பு
கிளிநொச்சி, முறிகண்டி பிள்ளையார் ஆலய பிரச்சினை பற்றிய மனித உரிமைகள் மனு உயர்நீதிமன்றின் தமிழ் பேசும் நீதிபதிகளினால் விசாரிக்கப்பட வேண்டுமென கட்டளையிடப்பட்டமை தொடர்பாக ஜனவரி 23ல் கவனத்தில் எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவான ஜி.மணிவண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் ஷிரானி திலகவர்த்தன, எஸ்.ஐ.இமாம், பியசத் தெப் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழாமின் முன் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
முறிகண்டி பிள்ளையார் ஆலய வழிபாட்டுக்காரர்கள் மன்றத்தின் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் வி.நாகராசா ஆகியோர் தலையிட்டு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனு விண்ணப்பத்தில், ஆலய வழிபாட்டுக்காரர்களின் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சுயாதீனமான நிர்வாக சபை இக்கோயிலை முகாமைத்துவம் செய்ய நியமிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இதனை அவதானித்த நீதிபதிகள் குழாம் எதிர்வரும் ஜனவரி 23ம் நாள் குறித்த விண்ணப்பம் தொடர்பில் கவனம் எடுக்கப்படுமென அறிவித்து விசாரணையை ஒத்திவைத்தது.