அமெரிக்கர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி! தேசிய சுதந்திர முன்னணி
புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையாக சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,
இலங்கையைச் சிதைப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு இடமளிக்கப் போவதில்லை.
கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. குறிப்பாக ஐநாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.
இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.
சீனாவுடன் இலங்கைக்கு நல்ல நட்புறவு உள்ளது.
எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும். அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.