தமிழர்களின் கலாசாரம் சீரழிகிறது என ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் கூறியிருப்பதை எவரும் சாதாரணமான விடயமாகக் கருதிவிடக் கூடாது.
நாங்கள் தமிழர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்வதற்கு அடிப்படையாக இருப்பது எங்கள் கலாசாரம் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.
எனவே தமிழினத்தின் அடையாளமாக இருக்கக் கூடிய கலாசாரத்தை அழிய விடுவோமாக இருந்தால் அது தமிழினத்தின் அழிவாக இருக்கும் என்பதே நீதியரசரின் தீர்ப்பு.
ஆக, எங்கள் இனத்தில் தற்போதுள்ள நோய் என்ன? என்பதை ஓய்வுபெற்ற நீதியரசர் மிகவும் ஆணித்தரமாக கூறியிருப்பதை ஏற்றுக் கொள்ளும் போது, நோய்க்கான மருந்துபற்றி சிந்திப்பதும் அதனைத் தேடிக்கொள்வதும் மிகவும் அவசியமானதாகின்றது.
நோயை இனங்காண்பது எத்துணை முக்கியமானதோ அதனைவிடப் பன்மடங்கு முக்கியமானது நோய்க்கான மருந்து.
எங்கள் கலாசாரம் சீரழிகிறது என, நாம் கூறிக் கொள்வதால் அது கட்டுப்பட்டு விடப்போவதில்லை.
எனவே அதனைத் தடுப்பதற்கு ஏற்ற திட்டங்களை வகுப்பது அவசியமானதாகும்.
எங்கள் கலாசாரம் சீரழிகிறது என ஓய்வு பெற்ற நீதியரசர் கூறுவதற்கு சில காலங்களுக்கு முன், யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலையின் வைத்திய நிபுணர் பேரானந்தராஜா அவர்கள் ஒரு சந்திப்பின்போது, எங்கள் பிள்ளைகளை ஆத்மீகத்தால் மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும்.
ஆத்ம பலம் - ஆத்ம சக்தி எங்கள் இளம் பிள்ளைகளிடம் ஏற்பட்டு விட்டால் எங்கள் பண்பாடு எங்கள் கலாசாரம் என்று எதற்குமே நாம் ஏக்கம் கொள்ளத் தேவையில்லை.
ஆத்மீகத்தை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனிடமும் ஆத்மீகத்தை ஏற்படுத்துவதுதான் ஒரேவழி என்று குறிப்பிட்டார்.
ஆம், ஆத்மீக தானம் என்பது இன்று எமக்கு அவசர தேவையாகவுள்ளது.
இளைஞர்களின் பிறழ்வான போக்குகளுக்கு இறைநம்பிக்கை பற்றிய நினைப்பு அறவே இல்லாமையே மூல காரணம் எனலாம்.
ஒரு இளைஞனை மேற்பார்வை செய்வதென்பது முடியாத காரியம்.
ஆனால் ஒரு இளைஞனிடம் இறை நம்பிக்கையையும் பாவம் புண்ணியம் என்ற மன உணர்வையும் ஏற்படுத்திவிட்டால் அவன் தன்னை மனிதனாக வளப்படுத்திக் கொள்வதற்கு அது போதும்.
எனவே, வைத்திய நிபுணர் பேரானந்தராஜா அவர்களின் கருத்தை அனைத்துப் பாடசாலைகளும் சிரமேற்கொண்டு செயற்படுத்துமாயின் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்பது திண்ணம்.
எங்கள் மண்ணில் வாழ்கின்ற ஓய்வுபெற்ற நீதியரசரும் வைத்திய நிபுணரும் எங்கள் தொடர்பில் கூடிய கருத்துக்களை கல்விச்சமூகம் கரிசனையோடு நோக்க வேண்டும்.