இந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்... இந்தியா வெளியிட்ட அறிவுறுத்தல்
காங்கோ, உகாண்டா மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளில் தற்போது வசித்து வரும் அல்லது அங்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியக் குடிமக்கள், உள்ளூர் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பொது சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார அவசரநிலை
இந்த நாடுகளில் எபோலா நோய் பரவல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

உலக சுகாதார முகமை தற்போதைய இந்த எபோலா பரவல் நெருக்கடியை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே இந்தியாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிவுறுத்தலில், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் பிற பாதிக்கப்பட்ட நாடுகளில் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும்,
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு இணங்கவும், மறு அறிவிப்பு வரும் வரை காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் இந்திய அரசு அறிவுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது.

நோய் பரவும் அபாயம்
இந்தியாவில் இதுவரை எபோலா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவைப் பாதித்து வரும் எபோலா வைரஸ் நோயின் பரவலை, ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெற்கு சூடான் உட்பட, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவை ஒட்டியுள்ள நாடுகளில் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது அதிக இறப்பு விகிதம் கொண்ட ஒரு தீவிர நோயாகும். எபோலா நோயைத் தடுக்கவோ அல்லது சிகிச்சையளிக்கவோ எந்தத் தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |