முப்படை தளபதி பிபின் ராவத் வீட்டிற்கு விரைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்!
விமான விபத்தில் சிக்கியுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டுக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.
ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தது.
இந்த விபத்தில் இறந்த 11 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின் கதி என்னவானது என தெரியவில்லை.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ஐஏஎப் எம்ஐ 17வி5 ரக ஹெலிகாப்டர் என்றும், இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்துள்ளார். அவர் இறந்துவிட்டாரா என்ற தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் விமான விபத்தில் சிக்கியுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் வீட்டுக்கு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மகளை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசியுள்ளார்.