மல்லுக்கட்டி நின்ற தீபக் சாஹர்! இறுதிவரை போராடி தோற்ற இந்திய அணி..
கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று, இந்திய அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் உள்ள நியுலெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்கா அணி 287 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக டி காக் 124 ஓட்டங்களும், வென் டர் டூசன் 52 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனையடுத்து 288 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 9 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.
இதன்பின் கூட்டணி சேர்ந்த ஷிகர் தவான் - கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷிகர் தவான் 61 ஓட்டத்திலும், கோலி 65 ஓட்டத்திலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.
கோலி விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த ஸ்ரேயஸ் ஐயர் 26 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழந்துவிட்டதால் தென் ஆப்ரிக்கா அணி இந்த போட்டியிலும் அபார வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில் களத்திற்கு வந்த தீபக் சாஹர், பேட்ஸ்மேன்களை விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமும் அடித்து அசத்தினார்.
நீண்டநேரம் போராடிய தீபக் சாஹரும் 54 ஓட்டங்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் இந்திய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக நிகிடி மற்றும் ஆண்ட்லே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.