மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை... அம்பலமான ரஷ்யாவின் துரோகம்
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்குள் மறைந்திருந்த வீரர்களை வெளியேற்ற சம்மதித்த ரஷ்யா, அவர்களை உக்ரைன் வீரர்களிடம் பிடிபட்ட ரஷ்யப் படையினருக்கு பதிலாக, உக்ரைனிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்தது.
ஆனால், செய்த ஒப்பந்தத்தை மீறி, இப்போது தங்களிடம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விட மறுத்துவிட்டது ரஷ்யா.
அத்துடன், ரஷ்யப் படைகளிடம் சிக்கியுள்ள உக்ரைன் படைவீரர்களை நாஸி போர்க் குற்றவாளிகள் என ரஷ்யா விமர்சித்துள்ளதுடன், அவர்களை உக்ரைனிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வர இருப்பதாக ரஷ்ய நாடாளுமன்றமும் அறிவித்துள்ளது.
மரியூபோலில் இருந்து உக்ரைன் வீரர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்கள் இன்னமும் ரஷ்ய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ரஷ்ய நாடாளுமன்ற தலைவரான Vyacheslav Volodin என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து விடுவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்களை உக்ரைனிடமிருக்கும் ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக விடுவிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
அத்துடன், உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டவரான அவரது சக நாடாளுமன்ற உறுப்பினரான Leonid Slutsky என்பவர், மரியூபோல் உருக்காலையிலிருந்து வெளியேற்றப்பட்ட உக்ரைன் படையினர் மனித உருவம் கொண்ட மிருகங்கள் என்றும், அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதனால், மரியூபோலிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், ரஷ்யப் படையினரிடம் சிக்கியிருக்கும் அந்த உக்ரைன் வீரர்களின் நிலை குறித்து அச்சம் உருவாகியுள்ளது.