இராணியார் கொரோனா தொற்றால் அவதி: அரண்மனை வெளியிட்ட தகவல்
நெதர்லாந்தின் முன்னாள் ராணியார் பீட்ரிக்ஸ் கொரோனா பாதிப்புக்கு இலக்கானதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெதர்லாந்து அரசரின் தாயாரான 83 வயது பீட்ரிக்ஸ் லேசான கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படும் பேத்தி அமலியாவின் பிறந்தநாள் விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாமல் போகும் என தெரிவித்துள்ளனர்.
பட்டத்து இளவரசியான அமலியா செவ்வாய்க்கிழமை 18 வயதை எட்டுகிறார். Curaçao தீவுகளுக்கு 4 நாள் தொழில்முறை பயணம் முடித்துக்கொண்டு ராணியார் பீட்ரிக்ஸ் திங்களன்று திரும்பியுள்ளார்.
மட்டுமின்றி, முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள ராணியார் பீட்ரிக்ஸ், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ராணியாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதை அடுத்து, Curaçao தீவுகள் நிர்வாகம் கொரோனா விதிகளை உரியமுறையில் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ராணியார் பீட்ரிக்ஸ் மாஸ்க் அனியாமலையே பல புகைப்படங்களில் காணப்படுவதாகவும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நெதர்லாந்து மக்கள் தனிமனித இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பதில்லை என்றே குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1980 முதல் 2013 வரையில் நெதர்லாந்தின் ராணியாராக பொறுப்பில் இருந்தவர்.
அதன் பின்னர் அவரது மகனுக்கு மொத்த பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் பீட்ரிக்ஸ்.