ஜேர்மனியில் பரபரப்பு! பால்கனியில் இருந்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்: பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
ஜேர்மனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்தபடி ஒருவர் தெரு முழுக்க சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் புதன்கிழமை மாலை, ஜேர்மனியின் Frankfurt an der Oder பகுதியில் உள்ள Zschokke strasse சாலையில் நடந்துள்ளது.
அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் பால்கனியில் இருந்து 39 வயதான அடையாளம் குறிப்பிடப்படாத நபர் ஒருவர், தன்னிடமிருந்து துப்பாக்கிகளை வைத்து கண்டபடி துப்பாக்கிச்சுடு நடத்தினார்.
இதனைப் கண்டு மிரண்டுபோன அக்கம் பக்கத்தினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, SEK எனும் ஆயுதமேந்திய சிறப்பு பொலிஸ் பிரிவினர் சிறிது நேரத்தில், அந்த நபரின் குடியிருப்பில் நுழைந்து, அங்கு பலத்த ஆயுதங்களுடன் இருந்த அந்த நபரை கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, அந்த குடியிருப்பில் சோதனை செய்த போது, அதிகாரிகள் ஏகப்பட்ட துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை கண்டுபிடித்து கைப்பற்றினர்.
துப்பாக்கிச் சட்டத்தை மீறியதாக பல குற்றச்சாட்டுகளுடன் அந்த நபர் இப்போது பொலிஸ் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த நபர் ஏன் பால்கனியில் இருந்து துப்பாக்கியால் வெறுமென சுட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.