500 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களைக் கொள்முதல் செய்யும் இந்தியா
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பை அடுத்து பேசிய மார்கோ ரூபியோ, 500 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளில்
எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது.

தனது நான்கு நாள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வந்தடைந்த அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள், எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் ஆகியவற்றின் மீது இருவரும் விவாதித்துள்ளனர்.
சந்திப்பைத் தொடர்ந்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ரூபியோ, டெல்லியில், அமெரிக்கா-இந்தியா உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன்.
மிஷன் 500
மத்திய கிழக்கின் சூழல், எரிசக்தித் துறையில் அமெரிக்கா-இந்தியா கூட்டாண்மை, முக்கிய விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாத்தல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மீதான ஒத்துழைப்பு ஆகியவை குறித்து நாங்கள் விவாதித்தோம்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சார்பில், பிரதமர் மோடியை வெள்ளை மாளிகைக்கு அழைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் அதில் பதிவு செய்துள்ளார்.

2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட மிஷன் 500 தொடர்பான முன்னெடுப்புகள் உட்பட, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்ததாகவே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |