அப்பாவி கிராம மக்களை கொன்று குவித்த ராணுவம்: தவறாக நினைத்ததாக விளக்கம்
இந்திய மாநிலம் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக சில அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டுமின்றி, எல்லைப் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து கிராம மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகாலாந்தில் மோன் மாவட்டம் ஒடிங் கிராமத்தில் நேற்று இரவு ஒரு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான என்.எஸ்.சி.என். (கே)-வைச் சேர்ந்தவர்கள் செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த கிராமம் மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி இருப்பதால் அந்த வாகனத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் ஒடிங் கிராமத்துக்கு விரைந்தனர். அப்போது ஒரு மினி வேன் ஒன்று ஒடிங்- திரு கிராமங்களுக்கு இடையே சென்று கொண்டு இருந்தது. இதை கவனித்த பாதுகாப்பு படையினர் அந்த மினி வேனை பின்தொடர்ந்து சென்றனர்.
வாகனம் நிற்காமல் சென்றதால் மேலும் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அதில் பயங்கரவாதிகள்தான் இருப்பார்கள் என்று நினைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மினி வேனில் இருந்தவர்கள் சம்பவயிடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.
பாதுகாப்பு படையினர் சுட்டதில் 13 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு படையினர் அந்த மினி வேனை ஆய்வு செய்தபோது அதில் வந்தவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதும், அப்பாவி கிராம மக்கள் என்பதும் தெரிய வந்தது.
மினி வேனில் சென்றவர்கள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் என பின்னர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு வேனில் சென்றுள்ளனர்.
அந்த வாகனத்தில்தான் பயங்கரவாதிகள் செல்வதாக தவறான தகவல் பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு அண்டை மாநிலமான அசாமில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.