இந்த அணி தான் ஐபிஎல் கோப்பை ஜெயிக்கும்! பும்ராவை இவர் அடித்து நொறுக்குவார்: காம்பீர் உறுதி
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சை யாரால் எளிதாக அடிக்க முடியும் என்பதை முன்னாள் இந்திய வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த முறை ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி ஜெயிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்பீர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வேல் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர்.
இவர்கள் இருப்பது பெங்களூரு அணிக்கு மிகுந்த பலமாக அமையும். குறிப்பாக டிவில்லியர்ஸ் இருப்பது எதிரணிக்கு பயத்தை உண்டாக்கும். அதிலும், பும்ரா போன்ற மிகப் பெரிய பந்து வீச்சாளரை கூட அவரால் எளிதாக அடித்து ஆட முடியும்.
என்னைப்பொருத்தவரை பும்ராவை அடித்து நொறுக்க கூடிய வீரர் என்றால் அது டிவில்லியர்ஸாக மட்டுமே இருப்பார்.
மேலும் கடந்த சில சீசன்களாகவே பந்துவீச்சாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த பெங்களூர் அணி தற்போது சிறப்பான பந்து வீச்சாளர்களையும் தங்கள் வசம் வைத்துள்ளதால் கோப்பையை வெல்ல அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.