தங்களுக்கான சவக்குழியை தோண்டிக்கொண்ட ரஷ்ய துருப்புகள்: சாவின் பிடியில் நூற்றுக்கணக்கானோர்
உக்ரைனில் அமைந்துள்ள செர்னோபில் பேரிடர் தளத்தில் அகழிகளை தோண்டிய நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் தற்போது சாவின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் விளாடிமிர் புடினின் துருப்புகள் பூமியிலேயே மிகவும் ஆபத்தான பகுதியில் எந்த பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் பணியில் ஈடுபட்டனர் என்றே நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது, தங்களுக்கான சவக்குழியை அவர்களே தோண்டிக்கொண்டதற்கு சமம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த வீரர்கள் அனைவரும் கொடூரமான புற்றுநோய் பாதிப்புக்கு இலக்காகும் ஆபத்தில் உள்ளதுடன், வரும் ஆண்டுகளில் அதன் தாக்கம் அவர்களுக்கு தெரியவரும் என குறிப்பிட்டுள்ளனர்.
செர்னோபில் பேரிடர் தளத்தில் இருந்து கடந்த மாதம் ரஷ்ய துருப்புகள் வெளியேறும் முன்னர், அவர்களில் பலரும் தோல் வெடிப்புகள் மற்றும் சிவந்த கண்களுடன் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
செர்னோபில் பேரிடர் தளத்தில் கடந்த 1986ல் இருந்தே கதிர்வீச்சு தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுவந்த ஆய்வாளர் ஒருவர், இவ்வளவு பொறுப்பற்றவர்களும் முட்டாள்களுமா ரஷ்யர்கள் என சாடியுள்ளார்.
மேலும், அகழி தோண்டக் கட்டளையிட்ட தளபதிகள் தங்கள் துருப்புகளின் பாதுகாப்பைப் பற்றி எதுவும் கவலைப்படவில்லை என்றே தெரிகிறது என்றார்.
பொதுவாக செர்னோபில் பேரிடர் தளத்தில் எவரையும் நடந்து செல்லவே அனுமதிப்பதில்லை. அந்த அளவுக்கு ஆபத்தான பகுதி அது. ஒருமுறை உடலுக்குள் ஊடுருவிய பின்னர், கதிர்வீச்சு அப்புறப்படுத்துவது கடினம் என கூறியுள்ள நிபுணர் ஒருவர், அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் பெரும் விலையை அளிக்க நேரிடும் என்றார்.
செர்னோபில் பேரிடர் தளமானது பெலாரஸ் அருகாமையிலும் உக்ரைனின் வடக்கு எல்லையில் இருந்து ஏழு மைல்கள் தொலைவிலும் அமைந்துள்ளது.
மேலும், ரஷ்ய படையெடுப்பு காலகட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 170 உக்ரைன் தேசியப்படை காவலர்கள், நிலத்தடி பதுங்கு குழிகளில் ரஷ்ய துருப்புகளால் சிறைவைக்கப்பட்டு, தற்போது அவர்கள் நிலை என்ன என்பது தொடர்பில் தவல் இல்லை என்றே கூறப்படுகிறது.