குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உபேர் சாரதி ஒருவர் பணி முடித்து குடியிருப்புக்கு செல்லும் வழியில் கோர விபத்தில் சிக்கி கொல்லப்பட்டுள்ளார்.
உபேர் சாரதி
பாகிஸ்தானைச் சேர்ந்த 22 வயது மாணவரான அந்த உபேர் சாரதி, வீட்டிற்குச் செல்லும் வழியில் அன்றிரவின் தனது கடைசி வேலையில் ஈடுபட்டிருந்தார்.

ஷோயப் ஹுசைன் என்ற அந்த மாணவர் படித்துக்கொண்டே தன் பிழைப்புக்காகவும், பாகிஸ்தானில் உள்ள தன் குடும்பத்திற்குப் பணம் அனுப்புவதற்காகவும் வார இறுதி நாட்களில் உபேர் சாரதியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
தனது பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில்தான் உபேர் சாரதியாகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால், வீடு திரும்புவதற்கு முன் மேற்கொள்ளவிருந்த கடைசிப் பயணம் சோகத்தில் முடிந்தது.
சனிக்கிழமை காலை, ஒரு இசை நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 28 வயதான சீமஸ் டுயினனை தமது காரில் ஹுசைன் அழைத்துச் சென்றிருந்தார்.
சிட்னியின் தெற்கில் உள்ள சான்ஸ் சௌசி என்ற இடத்தில், அதிவேகமாக வந்த வெள்ளை நிற ஆடி கார், ஹுசைனின் நீல நிற கேம்ரி கார் மீது மோதியது.
ஆடி சாரதியான தமாட்டி கில்பர்ட் தொடர்பில் நலன் விசாரிக்கும் பொருட்டு காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த கோர விபத்து நிகழ்ந்தது.
நள்ளிரவு சுமார் 12:25 மணியளவில், கில்பர்ட்டின் துணைவர் காவல்துறையைத் தொடர்புகொண்டு, அவரது மனநலம் குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜிமியா பே (Gymea Bay) பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
நான்கு ஆண்டுகள்
இந்த நிலையில் வீட்டுப் பாதையில் நின்றிருந்த ஆடி காரின் உள்ளே கில்பர்ட் அமர்ந்திருப்பதை காவல்துறையினர் கண்டனர்; ஆனால், அவர்களால் அவரிடம் பேச முடிவதற்கு முன்பே அவர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார்.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு, சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள சான்ஸ் சௌசியில், ராக்கி பாயிண்ட் சாலையில் ஒரு ஆடி கார் கான்கிரீட் தடுப்பைத் தாண்டிப் பாய்ந்து, ஒரு நீல நிற டொயோட்டா கேம்ரி மீது மோதியதாக அவசர சேவைகளுக்குத் தகவல்கள் கிடைத்தன.

இந்த கோர விபத்தில் டுயினன், ஹுசைன் மற்றும் கில்பர்ட் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். ஹுசைனின் நெருங்கிய நண்பரான காசிம் மாலிக் தெரிவிக்கையில்,
ஹுசைன் நான்கு சகோதரர்களில் இரண்டாவது நபர். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு படிப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அது முதல் அவர் தன் குடும்பத்தைப் பார்க்கவில்லை, இந்த நான்காண்டுகளில் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லவில்லை.
அவரது உடலை பாகிஸ்தானில் அடக்கம் செய்வதற்காக, அதைத் தாயகம் அனுப்பி வைக்குமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர் என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |