இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழன்! திருமணமாகி 40 நாட்களிலே நடந்த துயரம்
தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் என்பவர் சென்ற படகின் மீது, இலங்கை கடற்படை கப்பல் மோதியதால், அவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ஆம் திகதி 118 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதில், சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த சுகந்தன்,சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் 18 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அந்த வழியே இலங்கை கடற்படையினர் ரோந்து வந்த ரோந்து கப்பல், இவர்கள் வந்த விசைப்படகு மீது திடீரென்று மோதியதால், ராஜ்கிரண் என்பவர் அப்படியே கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
அதன் பின், இலங்கை கடற்படையினர், சுகந்தன் ஆகிய 2 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர்.
இலங்கை அரசின் இந்த செயலை கண்டித்து, ராஜ்கிரண் மற்றும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சேவியர், சுகந்தன் உள்ளிட்ட இரண்டு மீனவர்களை தமிழகம் கொண்டுவந்து உறவினர்களிடம் ஒப்படைக்ககோரியும் இறந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் மீனவரின் உறவினர்களும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 4 மாவட்ட மீனவர்களும் கோட்டைப்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ராஜ்கிரணின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின், இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், சர்வதேச எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கிருந்து படகில் வைத்து கொண்டுவரப்பட்ட ராஜ்கிரணின் உடல், கோட்டைப்பட்டினத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. ராஜ்கிரணின் உடலுக்கு அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்தினார்.
உயிரிழந்த ராஜ்கிரண் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், அந்த நிவாரணத் தொகையும் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது.
ராஜ்கிரணுக்கு திருமணம் ஆகி 40 நாட்களே ஆன நிலையில், அவரின் மனைவி உடலைப் பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. =