லண்டனில் பிரசங்கம் செய்துள்ள மத போதகர் நரபலி வழக்கில் கைது: அதிர்ஷ்டவசமாக தப்பிய பலர்
உலகில் பெருவெள்ளம் சூழ இருப்பதாக கூறி, இருவரை நரபலி அளித்த விவகாரத்தில் மத போதகர் ஒருவர் கைதாகியுள்ளார்.
தெற்கு லண்டனில் 2018ல் மத போதனையில் ஈடுபட்ட கத்தோலிக்க மத போதகர் 39 வயதான கெவின் ஒ ஸ்மித் என்பவரும் அவரது குழுவினர் 41 பேர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பகல் ஆராதனை வேளையில் இருவர் நரபலி அளிக்கப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் குறித்த மத போதகர் கைதாகியுள்ளார்.
தொடர்புடைய நரபலி சம்பவமானது ஜமைக்காவின் Montego Bay பகுதியிலேயே நடந்துள்ளது. இத்தகவல் தற்போது வெளியான நிலையில், பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் அவரது ஆதரவாளர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
வெளியான தகவலின் அடிப்படையில், 39 வயதான Tanecka Gardner என்ற பெண்மணி கழுத்து அறுக்கப்பட்டு நரபலிக்கு இலக்காகியுள்ளார். இந்த நரபலி சம்பவத்திற்கு முன்னர், பெருவெள்ளம் உலகை சூழ இருக்கிறது. ஆனால் தம்மை நம்புவோர்களை தம்மால் காப்பாற்ற முடியும் என கூறியுள்ளார் போதகர் கெவின் ஒ ஸ்மித்.
இரண்டாவதாக ஆண் ஒருவர், உடைகள் களையப்பட்டு நரபலி அளிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, இதே சடங்கில் படுகாயமடைந்த மூவரையும் பொலிசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உரிய நேரத்தில் பொலிசார் அப்பகுதிக்கு செல்ல நேர்ந்ததால் மட்டுமே அதிகமானோரை நரபலியில் இருந்து காப்பாற்ற முடிந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த மத போதகரால் பாதிக்கப்பட்ட 14 சிறார்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் மத போதகர் ஸ்மித் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அதில் தமது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்ந்து சுமார் 50 ஊழியர்கள் வெள்ளை உடை அணிந்து அந்த தேவாலயத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதன் பின்னரே தெரிவு செய்யப்பட்ட நபர்களை ஒவ்வொன்றாக நரபலிக்கு ஆயத்தம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
போதகர் ஸ்மித் மீது இதுவரை வழக்கு ஏதும் பதியவில்லை எனவும், ஆனால் போதுமான ஆதாரங்கள் திரட்டிய பின்னர் அவர் மீது வழக்கு பதியப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.