பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் சாலை விதிமுறைகள்!
பிரித்தானியாவில் அடுத்த வாரம் சர்ச்சைக்குரிய சில சாலை விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.
பிரித்தானியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சாத்தியமான விபத்துகளைக் குறைக்கும் நோக்கத்துடன் வரும் ஜனவரி 29-ஆம் திகதி முதல் புதிய சாலை விதிகள் நடைமுறைக்கு வருகின்றன. அதாவது சில நெடுஞ்சாலை குறியீடு மாற்றங்கள் அறிமுகமாகின்றன.
புதிய வழிகாட்டுதலின்படி, வாகனம் ஓட்டும் ஒருவர், சைக்கிள் ஓட்டுபவர்கள், நடப்பவர்கள் அல்லது குதிரை சவாரி செய்பவர்களை கவனிப்பதில் அதிகப் பொறுப்பைக் கொண்டிருப்பார்கள், மேலும் சைக்கிள் ஓட்டுபவர்கள் பாதசாரிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்பு அதிகம் இருக்கவேண்டும்.
இந்த புதிய விதிகளின்படி, வாகன ஓட்டிகள், சந்திப்புகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும்.
சைக்கிள் ஓட்டுபவர்கள் சில சூழ்நிலைகளில் சாலையின் நடுவில் சவாரி செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களுக்கென அங்கு ஒரு சைக்கிள் பாதை இருந்தாலும், அவர்கள் அதைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
அதேபோல், சைக்கிள் ஓட்டுபவர்களும், மற்ற வாகன ஓட்டுநர்களும் சந்திப்புகளில் கடக்கும் அல்லது கடக்க காத்திருக்கும் பாதசாரிகளுக்கும் நின்று வழிவிட வேண்டும்.
மேலும் தற்போதுள்ள 49 விதிகள் புதிய திருத்தங்களுடன் புதுப்பிக்கப்பட உள்ளன.
மற்ற முக்கிய திருத்தங்களில், மோட்டார் வாகன ஓட்டுநர்கள், சைக்கிள் ஓட்டுபவர்களை முந்திச் செல்லும் போது, குறைந்தபட்சம் 1.5 மீட்டர் தூரத்தை விட்டுச் செல்ல வேண்டும், அதேபோல், கடக்க காத்திருக்கும் பாதசாரிகளுக்கு வழி கொடுத்து பின்னர் அந்த சாலையை கடக்கவேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த புதிய மாற்றங்கள் குறித்து ஒருபுறம் சர்ச்சை எழுந்துள்ளது, பிரிட்டிஷ் டிரைவர்களின் கூட்டணி மற்றும் IAM RoadSmart உள்ளிட்ட விமர்சகர்கள், கொள்கை மாற்றம் நாட்டின் வாகன ஓட்டிகள் மற்றும் பிற சாலைப் பயனர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சுகின்றனர், இதில் சாலை சீற்றம் மற்றும் ஆபத்தான குழப்பம் ஆகியவை அடங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.