பிரித்தானியாவில் கொரோனாவை எதிர்கொள்ள NHS களமிறக்கும் புதிய திட்டம்!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதிய திட்டத்தை NHS களமிறக்கவுள்ளது.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) கொரோனா வைரசுக்கு எதிராக "நிலைமையை மாற்றக்கூடிய" வைரஸ் தடுப்பு மாத்திரையை வெளியிட தயாராக உள்ளது.
NHS-ன் கூற்றுப்படி, பிரித்தானியாவில் இந்த கிறிஸ்துமஸுக்குள் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு லாகேவ்ரியோ (Lagevrio) என்றும் அழைக்கப்படும் மோல்னுபிராவிர் (Molnupiravir) மாத்திரை கிடைக்கக்கூடும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது.
கடந்த மாதம் உலகிலேயே முதல் நாடாக பிரித்தானியா அங்கீகரித்த இந்த மருந்தை, நாடு தழுவிய அளவில் சோதனை நடத்தப்படும் என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
ஸ்கை நியூஸ் செய்தியின் படி, இந்த திட்டத்தை கோடிட்டுக் காட்டும் கடிதம் உள்ளூர் சுகாதாரத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த திட்டத்தின் துவக்கம் தொடர்பான குறிப்பிட்ட தேதி எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்படக்கூடிய கோவிட் நோயாளிகள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் வெளியாகவுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் பருமன், நீரிழிவு நோய் அல்லது இதய நோய்கள் போன்ற கடுமையான நோய்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஆபத்து காரணி உள்ளவர்கள் Molnupiravir மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிக்கை கூறியது.
அறிக்கையின்படி, NHS மருத்துவ ரீதியாக பலவீனமான மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு COVID-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்த பிறகு 48 மணி நேரத்திற்குள் மருந்தை பரிந்துரைக்கத் தொடங்கும்.