அமெரிக்காவில் பற்றிய காட்டுத் தீயின் புகைமண்டலம் கனடாவிலும் பரவியுள்ளது அந்நாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை அழித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளையும் சாம்பலாக்கியுள்ளது. இப்பகுதியில் மட்டும் பெருநெருப்பின் காரணமாக 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரேகான் மாகாணத்தில் தீக்கிரையான ஆயிரக்கணக்கான வீடுகளில் யாரும் உள்ளனரா என தீயணைப்பு வீரர்களும், மீட்புப் படையினரும் தேடி வருகின்றனர். ஒரேகானில் மட்டும் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
புகை காரணமாக போர்ட்லேண்டில் காற்றின் தரம் உலகின் முக்கிய நகரங்களில் உள்ளதை விட மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் தொடங்கிய காட்டுத் தீ ஒரேகான், வாஷிங்டன் என பரவி வருவதால் ஏற்பட்ட புகை மூட்டம் கனடாவின் வான்கூவர் நகரிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதி நெருப்பினால் சூழப்படும் அதிக ஆபத்தில் இருப்பதாக கனடா அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.