கனடாவில் வேகக்கட்டுப்பாட்டை மீறிச் சென்ற கார் ஒன்றை பொலிசார் தடுத்து நிறுத்தியபோது, அதிலிருந்த நபர் வாழ்நாள் முழுவதும் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
நேற்று மதியம் 1 மணியளவில் விமான நிலையம் செல்லும் பாதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தினர் பொலிசார்.
அந்த காரில் ரொரன்றோவைச் சேர்ந்த Timothy Fraser (60) என்பவர் இருந்தார். அவரது ஆவணங்களை சோதித்த பொலிசாரான Const. Shannon Gordanier என்பவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், Timothyக்கு ஏற்கனவே எட்டு முறை குற்றச்செயலுக்காக கார் ஓட்ட ஆயுள் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், ஒன்ராறியோ நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் இருமுறை தற்காலிக தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
எனது 13 வருட அனுபவத்தில் இப்படி ஒரு விடயத்தை நான் பார்த்ததில்லை என்கிறார் Gordanier.
அத்தனை முறை தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி வந்துள்ளார் Timothy.
தடை செய்யப்பட்ட நிலையில் வாகனம் ஓட்டியது, தற்காலிக தடையின்போது வாகனம் ஓட்டியது, வேகக்கட்டுப்பாட்டை மீறியது மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன.