இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது.
இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 396 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 621 ரன்களும் குவித்தன. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 5 வீரர்கள் காயத்தில் சிக்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.
நல்லவேளையாக நாங்கள் 21 வீரர்களை அழைத்து வந்தோம். இல்லாவிட்டால் அடுத்த டெஸ்டில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 3-வது வரிசையிலும், நான் 4-வது வரிசையிலும் ஆட வேண்டியது இருந்திருக்கும் என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார்.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.