அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மரடோனா புதன்கிழமை தனது 60 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, மரடோனா மூளை அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
இந்நிலையில், மரடோனாவுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் வழங்கப்பட்டதா என்பதை கண்டறிய புலனாய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரடோனா ஒரு நாளைக்கு எட்டு மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த நாளில், செவிலியர் அவருக்கு ஒரு மாத்திரையை கொடுக்கத் தவறியிருக்கலாமா என்று விசாரணை நடத்தப்படுகிறது.
வியாழக்கிழமை, மரடோனாவின் வழக்கறிஞரான மத்தியாஸ் மோர்லா, மரடோனாவுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று கூறியதுடன், அவரது மரணம் குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
வெள்ளிக்கிழமை, மருத்துவ நிபுணரகள் நச்சுயியல் ஆய்வு நடத்தினர், இது மரடோனா தனது வாழ்க்கையின் கடைசி மணிநேரத்தில் எந்த மருந்துகளை எடுத்தது என்பதை கண்டறிய உதவுமாம்.