பெங்களூரில் நடந்துவரும் வரலாறு காணாத வன்முறை வெறியாட்டம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உச்சகட்டமாக 50க்கும் மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பஸ்களை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும், உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெங்களூரு நகரம் இன்று வரலாறு காணாத வன்முறையைச் சந்தித்துள்ளது.
தொடர்ந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டக்காரர்கள். அவர்களை அடக்க முடியாமல் அல்லது அடக்கத் தெரியாமல் காவல்துறையினர் திணறிக் கொண்டுள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பம் பெரும் பீதியில் சிக்கித் தவிக்கிறது.
டிஎன் என்ற எழுத்தைப் பார்த்தாலே வெறி கொண்டு தாக்கி வாகனங்களை சேதப்படுத்தி தீயிட்டுக் கொளுத்துகிறார்கள். இதன் உச்சகட்டமாக ஒரே இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 65 ஆம்னி பேருந்துகளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளது ஒரு கும்பல். இது திட்டமிட்ட செயலா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து பெங்களூருக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று மக்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழர்களுக்கு எதிராக இவ்வளவு வன்முறை நடந்தும் கூட மத்திய அரசு அமைதி காப்பது கண்டிக்க தக்கசெயலாக உள்ளது.