இலங்கையில் இருந்து விமானத்தில் மதுரை வந்த நபரின் ஆசனவாயில் களிமண் கலவையில் தங்கம் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர்.
அப்போது திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல்ரகீம் ரியாஸ் என்பவர் சோதனைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ஆசனவாயில் களிமண் கலவையில் தங்கம் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ரியாஸிடம் இருந்து அதனை எடுத்து உருக்கி பார்த்தபோது 395 கிராம் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 67 ஆயிரம் ஆகும்.
அதே விமானத்தில் இதே முறையில் 500 கிராம் தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் சின்னதொண்டியை சேர்ந்த பார்த்திபன் (29) என்பவரும் அதிகாரியிடம் சிக்கினார்.
பார்த்திபன் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.16 லட்சத்து 4 ஆயிரம் ஆகும்.