கேரளாவில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் சக தொழிலாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சில தொழிலாளர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரியில் புல், புதர்களை அகற்றும் பணிக்கு சென்றிருந்தனர்.
அதில் புவனச்சந்திரன் (58) என்கிற நபர் மைதானத்தை சுத்தம் செய்துகொண்டிருந்த போது மலைப்பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
உடனே அதனை பிடித்து சாக்குமூட்டையில் அடைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அந்த மலைப்பாம்பு அவருடைய கழுத்து பகுதி முழுவதையும் சுற்றிவளைத்து நெரிக்க ஆரம்பித்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி அவருடைய கழுத்தை சுற்றியிருந்த மலைப்பாம்பை வெளியில் எடுத்தனர்.
நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் புவனச்சந்திரன் பத்திரமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியானது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.