தமிழகத்தின் விழுப்புரம் அருகே கந்து வட்டி கொடுமையால் தச்சு தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான மோகன்(36). இவர் மரப்பட்டறை வைத்து நடத்தி வந்ததுடன், கடன் சுமையாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமை இரவு மோகன் தனது மனைவி விமலேஸ்வரி(30) மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(8), விமலஸ்ரீ(7), மகன் சிவபாலன்(4) ஆகிய 3 குழந்தைகளுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திங்கள்கிழமை காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
கதவை உடைத்து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. தகவல் அறிந்த வளனூர் காவல்துறையினர் நிழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து சடலங்களை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பில் முதன்மை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர் வருகின்றனர்.
கந்து வட்டி கொடுமையால் குடும்பத்துடன் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.