சீனாவில் கொரோனா தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் உண்மையில் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்ற கேள்வி நிபுணர்களிடையே எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று ஆறு முறை பரிசோதிக்கப்பட்டு இல்லை என்று முடிவுகள் வந்தவர்களுக்கு, ஏழாவது முறை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கொரோனா தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கும் சீனாவின் ஹூபே மாகாணத்தின் அதிகாரிகள்,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை மூலம் உறுதி செய்வதற்கு பதிலாக, வெறும் அறிகுறிகளை வைத்தே முடிவுக்கு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 15,000 பேர் இணைந்து கொண்டனர்.


பொதுவாக நோயாளியிடமிருந்து பெறப்படும் மாதிரியில் கொரோனா வைரஸின் மரபணு குறியீடு உள்ளதா என்பது ஆய்வகத்தில் பல கட்ட சோதனைக்கு பிறகு கண்டறியப்படும்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை மேற்கொண்ட 167 பேரில் ஐந்து பேருக்கு நுரையீரல் குறைபாடு உள்ள நிலையிலும், அவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று முடிவுகள் வந்தன. ஆனால், மறுபரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பை முதன் முதலில் வெளிப்படுத்தியதாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவர் லீ வெண்லியாங்,
தனக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்று பலமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்ததாக கூறிய நிலையில், பிறகு அவர் இதே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் பரிசோதனை முறை குறித்த இதுபோன்ற கவலைகள் சீனா மட்டுமின்றி, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் நிலவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.