கொரோனா பெருந்தொற்றை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பல கோடி பேர்களை பாதித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா பெருந்தொற்றின் புதிய வீரியம் மிக்க உருமாற்றம், ஏப்ரல் மாதத்தில் முதல் அலை ஏற்பட்டதை விட மிக மோசமாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகம் செய்ய துவங்கிவிட்டன.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவன அவசரநிலைத் திட்டத் தலைவர் டாக்டர் மார்க் ரியான் கூறுகையில், இது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நேரம். கொரோனாவை விட மிக மோசமான ஆபத்துக்கு உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றானது மிக விரைவாக உலகின் அனைத்து மூலையிலும் பரவியதுடன், அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் இதுவொன்றும் உண்மையில் பெரிதல்ல. வளர்ந்து வரும் பிற நோய்களுடன் ஒப்பிடும்போது கொரோனா பெருந்தொற்றின் தற்போதைய இறப்பு விகிதம் மிகக் குறைவே என்றார்.
மேலும், இது தொடக்கம் மட்டுமே என எச்சரித்துள்ள டாக்டர் மார்க் ரியான், கண்டிப்பாக இதன் தொடர்ச்சி இருக்கும் என்றார்.
ஆனால் நாம் ஒன்றிணைந்து போராடுவதால் மட்டுமே எதிர்வரும் ஆபத்துகளை நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார்.