சுவிட்சர்லாந்தில் பிரபல ஹொட்டல் ஒன்றில் கொலை செய்யப்பட்ட நபரால் அப்பகுதி முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான அந்த ஹொட்டலானது குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியை வழங்கி வருகிறது.
இந்த ஹொட்டலிலேயே அறை ஒன்றில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹொட்டல் அறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர் இச்சம்பவத்தை நேரில் பார்த்துள்ளார்.
உடனடியாக ஹொட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த பொலிசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டுள்ளனர்.
அறை எங்கும் ரத்தம் தளம் கெட்டி கிடந்ததாகவும், கடுமையான மது வாடையும் இருந்தது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட நபருக்கு 35 முதல் 40 வயது இருக்கும் எனவும் போர்த்துகல் நாட்டவர் அவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். சடலம் மீட்கப்பட்ட அறையில் இருந்து அதிக சத்தம் கேட்டதாகவும்,
அந்த ஹொட்டல் நிர்வாகத்திற்கு இது தொடர்பில் புகார் தெரிவித்திருந்ததாகவும், அங்கு தங்கியிருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் தற்போது கொலை ஆயுதம் தொடர்பில் தேடி வருவதாகவும், குற்றவாளி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
