லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கோடீஸ்வரர் நீரவ் மோடியின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது, 11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் உள்ளிட்டோர் கடந்த ஆண்டே நாட்டை விட்டு தப்பி சென்றனர்.
அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிரவ் மோடியின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பொருட்கள் மற்றும் ஆவணங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேசமயம், வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி வெவேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வந்த நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, பிரித்தானியா உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் கடந்த மார்ச் மாதம் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடியின் ஜாமின் மனுக்கள் லண்டன் நீதிமன்றத்தால் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில், நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து, வீடியோ கான்ஃபரென்ஸ் மூலம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து அவரது காவலை வருகிற நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.