பிரித்தானியாவில் ஆரோக்கியமாக இருந்த 17 வயது சிறுவனுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரை சேர்ந்தவர் பென் லிட்டில்வுட் (17).
இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் தனது குடும்பத்தாருக்கு தேனீர் தயாரித்து கொண்டிருந்த போது திடீரென தனது தலையை திருப்பினார்.
அப்போது பக்கவாதம் ஏற்பட்டு கீழே சரிந்து விழுந்தார்.

அந்த சமயத்தில் அருகில் யாரும் இல்லாததால் உடனடியாக உதவ வரமுடியவில்லை.
பின்னர் பென் தாயார் விக்கி ப்ரோக்ஹஸ்ட் அங்கு வந்து மகன் நிலையை பார்த்து பதறி அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு எட்டு நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையிலும் சிகிச்சை பலனின்றி பென் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்து மாதங்கள் கடந்தும் அந்த வலியில் இருந்து பென் குடும்பத்தார் மீளவில்லை.
இது குறித்து பென் தாயார் கூறுகையில், அவனுக்கு புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற எவ்விதமான தீய பழக்கங்களும் இல்லை. பென் மிகவும் ஆரோக்கியமாக இருந்தான்.

அவன் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பின்னர் மூளைக்கு செல்லும் இரத்தம் உறைந்து அவன் உயிர் போனதாக கூறுகிறார்கள் என கூறியுள்ளார்.
பென் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு முதலில் ஸ்கேன் எடுத்து சிகிச்சையை தொடங்கிய தமிழரான மருத்துவர் சிவ கோடீஸ்வரன் கூறுகையில், முதலில் பென் மூளையில் கட்டி இருக்கலாம் என நினைத்தேன்.
ஆனால் அவர் மூளை சாதாரண நிலையிலேயே இருந்தது.
பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் Basilar Artery Thrombosis என்னும் இரத்தக்கட்டியடைப்பு பிரச்னை இருந்தது தெரியவந்தது.
அதன் காரணமாக அவனுக்கு மிகவும் அரிதாக ஏற்படும் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
இதனிடையில் பென்னின் திடீர் மரணத்தை தொடர்ந்து பக்கவாதம் தொடர்பாக அவர் குடும்பத்தார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முக்கியமாக பக்கவாத அமைப்புக்காக £2,100 நிதியை வசூலித்து பென் குடும்பத்தார் கொடுத்துள்ளனர்.
