பிரித்தானியாவின் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று தங்கள் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி கேட்டு பெரும் தொகை லஞ்சம் தர முன்வந்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து இயங்கும் அந்த நிறுவனமானது சில மருத்துவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்காக லஞ்சம் தர முன்வந்துள்ளது.
ஏறக்குறைய 20 தடுப்பூசிகள் தங்களுக்கு தேவை என்று லண்டனைச் சேர்ந்த அந்த நிறுவனம் கூறியுள்ளது.
மட்டுமின்றி பிரிஸ்டல் மற்றும் வொர்திங் பகுதிகளில் உள்ள மருத்துவர்களிடம் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
அதில் வொர்திங் பகுதி மருத்துவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக உரிய அமைப்புக்கு புகார் அளித்துள்ளனர்.
தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முன்வந்தால் தலா 5,000 பவுண்டுகள் வரை அளிக்க தயார் என அந்த மின் அஞ்சலில் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக 100,000 பவுண்டுகள் வரை தர தாங்கள் தயார் எனவும் அந்த மின் அஞ்சலில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விவகாரம் அம்பலமானதும், அந்த நிறுவனம் தங்கள் கோரிக்கையானது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும்,
பதிவு செய்தும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களின் தடுப்பூசியை மட்டுமே தாங்கள் கோரியதாகவும், எங்களின் நல்லெண்ணம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.