உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் எல்லைகளை மொத்தமாக மூட பிரித்தானியா முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரித்தானியா குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவர்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பிரித்தானியாவின் எல்லைகளை இவ்வாறு மொத்தமாக மூடுவதில், அரசுக்கு உண்மையில் உடன்பாடு இல்லை என்றாலும், தற்போதைய சூழல் காரணம் நிர்பந்திக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பெருவாரியான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு, நாடு சகஜ நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பம் என குறிப்பிட்டுள்ள சுற்றுச்சூழல் செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ்,
கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் நிலையில் இருப்பதாகவும், நாட்டின் எல்லைகளை மொத்தமாக மூடுவது தொடர்பில் தீவிர ஆலோசனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உருமாற்றம் கண்ட புதிய கொரோனா பரவல் நாட்டில் தற்போதைய தடுப்பூசி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர்களை தாம் எச்சரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள், விமான நிலைய ஹொட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள் எனவும்,
தனிமைப்படுத்துதல் நாட்களில் அவர்களே உரிய கட்டணங்களை செலுத்த வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் செயலாளர் ஜார்ஜ் யூஸ்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிரித்தானியாவுக்கு வருகை தரும் பயணிகள் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, கடந்த 72 மணி நேரத்தில் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.