அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சையில் இராணுவத்தை இழுப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் ஜனாதிபதி டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி டிரம்பின் தற்போதைய நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டை ஆபத்தான, சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பற்ற எல்லைக்குள் கொண்டு செல்லும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைதியான முறையில் அதிகாரப்பகிர்வு நடந்தேற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அந்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள், ஜனாதிபதி டிரம்ப் மக்களின் முடிவை கண்டிப்பாக ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனின் வெற்றி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பல மாகாணங்களில் நீதிமன்றங்களே ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ள நிலையில், இனி மேலும் கடும்போக்கு தொடர்வது முறையல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகாரப்பகிர்வு சுமூகமான முறையில் நடந்தேற வேண்டும் எனவும், அதற்கு அதிகாரிகள் தரப்பு கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜோ பைடனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அந்த 10 முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களில் இருவர் ஜனாதிபதி டிரம்புடன் பணியாற்றியவர்கள் ஆவார்கள்.
மட்டுமின்றி குறித்த 10 முன்னாள் அமைச்சர்களும் தற்போது குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.