பிரித்தானியாவில் நான்கு நாள் வேலை திட்டத்திற்கு தயாரான 100 நிறுவனங்கள்
பிரித்தானியாவில் இரண்டு நிறுவனங்கள் நான்கு நாட்கள் வேலை திட்டத்திற்கு கையொப்பமிட்டுள்ளன.
சோதனைத் திட்டம்
கொரோனாவிற்கு பிறகு உலக அளவில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் ஒன்று தான் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டம்.
இந்த திட்டத்தின்படி, ஊழியர்கள் நான்கு நாட்கள் வேலை செய்தாலும் முழு ஊதியம் அளிக்கப்படும். குறைந்த நாட்கள் வேலை செய்வதன் மூலம் நிறுவனங்கள் தங்களது வேலைக்கான இலக்கை அடைகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவில் இந்த சோதனை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அந்தந்த நிறுவனங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 88 சதவீத நிறுவனங்கள் தங்கள் வணிகத்திற்கு இந்த திட்டம் சாதகமாக, நன்றாக வேலை செய்ததாக தெரிவித்தனர்.
கணக்கெடுப்பில், 15 சதவீதம் உற்பத்தித்திறன் வியத்தகு முறையில் உயர்ந்துள்ளதாகவும், மீதமுள்ளவற்றில் எந்த மாற்றமும் இல்லை அல்லது சிறிய அளவிலான முன்னேற்றம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் சுமார் 95 சதவீத நிறுவனங்கள், அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து உற்பத்தித் திறன் ஒரே மாதிரியாக இருந்ததாக அல்லது மேம்பட்டதாக கூறியுள்ளன.
இரண்டு நிறுவனங்கள் கையொப்பம்
இந்த நிலையில், பிரித்தானியாவில் Atom வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான Awin ஆகிய இரண்டு நிறுவனங்களும் நான்கு நாட்கள் வேலை திட்டத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் தலா 450 ஊழியர்களை கொண்டுள்ளன.
இதுகுறித்து Awin தலைமை நிர்வாகி ஆடம் ரோஸ் கூறுங்கையில், ' இது நிறுவனத்தின் வரலாற்றில் நாங்கள் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும்' என தெரிவித்துள்ளார்.
100 நிறுவனங்கள்
100 பிரித்தானிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைக்காமல், நிரந்தரமாக நான்கு நாட்கள் வேலை திட்டத்தை அமுல்படுத்த தயாராக உள்ளன.
இதனைத் தொடர்ந்து, புதிய வேலை முறை திட்டத்தில் கையொப்பமிடுவதன் மூலம் 100 நிறுவனங்களில் உள்ள சுமார் 2,600 ஊழியர்கள் பயனடைவதுடன், அதன் உரிமையாளர்கள் அங்கீகாரம் பெற்ற முதலாளிகளாக மாறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்சில் இந்த திட்டத்தின் செயல்முறையின்போது தொழிலாளர்கள் ஒரு நாள் குறைவாக இருந்தாலும், அதே அளவு மணிநேரத்தில் வேலை செய்வதும், அவர்களின் கூடுதல் நேரத்திற்கும் அவர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்குவதும் கண்டறியப்பட்டது.