100 சதவீதம் அது உண்மை தான்! பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் பற்றி சக ஆசிரியர்கள் கொடுத்த வாக்குமூலம்
தமிழகத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அது எல்லாம் உண்மை தான் என்று சக ஆசிரியர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், தற்போது இருக்கும் மாணவிகள் என பலரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த பொலிசார், அவரின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி அதன் அடிப்படையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர் நான் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை தான், என் மீது மாணவிகள் புகார் கொடுத்தும், பள்ளி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இப்படி செயலில் ஈடுபட்டதாக இரண்டாம் நாள் விசாரணையில் ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், மூன்றாம் நாள், ஆசிரியர் ராஜகோபாலன் குற்றச்சாட்டு வைத்த ஆசிரியர்கள் மற்றும் உடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களை நேரில் அழைத்து அவர் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.
அப்போது சக ஆசிரியர்கள் ராஜகோபாலனுக்கு எதிரான வாக்குமூலம் அளித்துள்ளனர். இதை பொலிசார் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். பத்மா சேஷாத்திரி பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூத்த ஆசிரியர் ராஜகோபாலனுடன் நாங்களும் பாடம் எடுத்து வருகிறோம்.
வாரத்தில் 3 நாட்களுக்கு ராஜகோபாலன் மதிய உணவு எடுத்து வரமாட்டார். அதற்கு பதில் மாணவிகள் கொண்டு வரும் உணவுகளை வாங்கி சாப்பிடுவார். இதை ஆசியர் மாணவிகளுக்கு இடையே நல்லூறவு ஏற்படுத்தும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், ராஜகோபாலன் தவறான எண்ணத்தில் தான் மாணவிகளிடம் பழகி வந்தது எங்களுக்கு போகபோக தான் தெரியவந்தது.
பள்ளி நிர்வாகத்திடம் ராஜகோபாலன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவரின் தவறுக்கு ஒரு வகையில் நாங்களும் காரணமாக ஆகிவிட்டோம். அதேநேரம் சில ஆசிரியர்கள், ராஜகோபாலனிடம், இது தவறு. மாணவிகள் நமக்கு மகள்கள் போன்று என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.
அதற்கு ராஜகோபாலன் எனக்கு தான் பிள்ளைகளே இல்லையே, அப்புறம் எதற்கு நான் மாணவிகளை மகளாக நினைப்பது என்று கூறுவார். என் விஷயத்தில் நீங்கள் தலையீடாதீர்கள் என்று கூறுவார்.
இதன் பிறகு நாங்கள் அவரை கண்டுகொள்வதில்லை. இருப்பினும், 11 மற்றும் 12ம் வகுப்பு பொருளாதார ஆசிரியர் மட்டும் பலமுறை மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து வரும் வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலனை கண்டிப்பார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். அதன்படி பத்மா சேஷாத்திரி பள்ளியின் பொருளாதார ஆசிரியரை நேற்று முன்தினம் இரவு அசோக் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து பொலிசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அந்த ஆசிரியர், பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளை ஏமாற்றி பலமுறை பாலியல் தொந்தரவு செய்து வந்தது உண்மைதான். இதை பலமுறை நான் நேரில் பார்த்து ராஜகோபாலனை கண்டித்து இருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் என்னிடம் கூறி அழுதுள்ளனர். நான் அவர்களிடம் ராஜகோபாலனிடம் கவனமாக இருங்கள் என்று கூறி சமாதானம் செய்வேன். என்னுடன் பணியாற்றிய சக ஆசிரியர் ராஜகோபாலன் என்றாலும், அவரது தவறை ஒரு நாளும் நான் மன்னிக்க மாட்டேன்.
ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் பொலிசாரிடம் அளித்துள்ள புகார்கள் அனைத்தும் 100 சதவீதம் உண்மைதான்.
அவருடன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த சக ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.