பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள்
எப்படியாவது பிரித்தானியாவில் குடியேறிவிடமாட்டோமா, அங்கு ஏதாவது ஒரு வேலை கிடைத்துவிடாதா என ஏராளமானோர் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானியாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளுக்கு பணிக்காக செல்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டொன்றிற்கு 9,000 செவிலியர்கள்
பிரித்தானியாவில் ஏற்கனவே செவிலியர்களுக்கு பற்றாக்குறை காணப்படும் நிலையில், ஆண்டொன்றிற்கு சுமார் 9,000 செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குப் பணிக்குச் செல்கிறார்கள்.
கடந்த ஆண்டில் மட்டும், பிரித்தானியாவில் பணிபுரியும் 12,400 செவிலியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கில், certificate of current professional status (CCPS) என்னும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
Photograph: Andy Rain/EPA
காரணம் என்ன?
ஒரு காலத்தில் பிரித்தானியாவில் நல்ல ஊதியம் கிடைக்கும் என பிரித்தானியாவுக்கு பணிக்கு வந்த செவிலியர்கள், பின்னர், அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பிரித்தானியாவைவிட கூடுதல் ஊதியம், சொல்லப்போனால், இரண்டு மடங்கு அதிக ஊதியம் கிடைப்பது தெரிந்ததும், பிரித்தானியாவை விட்டு விட்டு அந்த நாடுகளுக்கு பணிக்குச் செல்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பிரித்தானியாவில், செவிலியர் ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு 36,500 பவுண்டுகள் ஊதியம் வழங்கப்படும் நிலையில், அவுஸ்திரேலியாவில் 56,350 பவுண்டுகளும், நியூசிலாந்தில் 45,000 பவுண்டுகளும், அமெரிக்காவில் 67,000 பவுண்டுகளும் ஊதியம் வழங்கப்படுகிறது.
எப்படியும் சொந்த நாட்டைவிட்டு குடும்பத்துக்காக உழைப்பதற்காக வெளிநாட்டுக்கு செல்வது என்று முடிவு செய்தாகிவிட்டது. அப்புறம் ஏன் ஆண்டொன்றிற்கு 36,500 பவுண்டுகள் ஊதியத்திற்கு பிரித்தானியாவில் வேலை செய்யவேண்டும், அமெரிக்காவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ, நியூசிலாந்துக்கோ செல்லலாமே என்ற மன நிலை உருவாகிவிடுகிறது.
ஆக, பிரித்தானியாவுக்கு செவிலியர் பணிக்கு வருவோர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்துவிட்டு, அந்த பணி அனுபவத்தை ஆதாரமாக வைத்து மற்ற நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் ஒரு ட்ரெண்டும் காணப்படுகிறது.
ஏற்கனவே பிரித்தானியாவில் 40,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் செவிலியர்களும் சில ஆண்டுகளில் வேறு நாடுகளுக்குப் புறப்பட்டுவிடுவது பிரித்தானிய மருத்துவ அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |