கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி மரணம்!
தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் காதல் விவகாரத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
மாணவியின் வீட்டிற்கு அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது அவருக்கும் மாணவிக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விடயம் விஜய்யின் அத்தை அலமேலுவுக்கு தெரிய வந்த நிலையில், தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு மூவரும் மாணவியின் குடும்பத்துடன் தகராறு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக மாணவி ஸ்ரீமதியின் மரணம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், மீண்டும் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.