பிரித்தானியாவில் காணாமல் போன சிறுவன் பிணமாக மீட்பு! வெப்ப அலையால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
பிரித்தானியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிறுவர்கள் உட்பட மொத்தம் 18 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் வெப்பநிலை 32C என பதிவாகி வரும் நிலையில், மக்கள் ஏரிகள் மற்றும் கடற்கரை நோக்கி படையெடுக்கின்றனர்.
இங்கிலாந்தில் Cheshire கவுன்டியில் நேற்று 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க முடியாமல், Dee நதியில் குளிக்கச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனான்.
சுமார் 7 மணிநேர தேடுதலுக்குப் பிறகு அவன் நதியில் பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, Trent நதி, Stanborough ஏரி, Crosby கடற்கரை, Knottingley - Goole கால்வாய் என பல இடங்களில் வயது வித்தியாசமின்றி பலர் இறந்துள்ளார். அனைவரும் கொளுத்தும் வெயிலின் சூட்டை தணிக்க நீரில் நீந்தச் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஏரி, குளம், நதிகளில் நீச்சலடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அதிகாரிகள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இருப்பினும் மரணங்கள் அதிகரித்துவருகிறது.