பிரித்தானியாவில் பெண் காவலரை கடித்து காயப்படுத்திய வன்முறையாளர்கள்: இருவர் அதிரடியாக கைது
நோர்போக்கில்(Norfolk) தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் வன்முறையில் பொலிஸார் காயமடைந்ததை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கூட்டத்தில் வன்முறையை கட்டுப்படுத்த சென்ற போது பெண் காவலரை கடுமையாக கடித்து காயப்படுத்தியதுடன், மற்றொரு காவலர் கல்லால் தாக்கி காயமடைய செய்துள்ளனர்.
வன்முறையாளர்களின் இந்த செயல்களை காவல்துறை அதிகாரிகள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இதற்கிடையில் புதன்கிழமை மோதல்களுக்கு பிறகு பொது அமைதியை குலைத்தல் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 40 வயது நபர் மற்றும் 60 வயதுடைய நபர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையின் பின்னணி
தங்குமிடங்களில் அகதிகள் தங்க வைக்கப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து தெட்போர்ட்டில் (Thetford) பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் கூட்டம் அத்துமீறி நுழைய முயற்சித்தது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, அத்துடன் அங்கு வீடுகளில் இருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் உள்ளூர் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் காவல்துறையினர் தலையீட்டு வன்முறை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை
வன்முறை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நோர்போக் காவல்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரை தீவிர பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் முகக் கவசத்தை காவல்துறையினர் அகற்ற கோரும் பட்சத்தில் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் அல்லது உடனடியாக பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |