அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இருவர்: இரத்த தானம் பெற்றதால் உருவாகியுள்ள பயங்கர பிரச்சினை
அரிய வகை நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவதியுற்றுவரும் ஒரு சிறுமி உட்பட இருவர், முன்பின் தெரியாதவர்களிடம் இரத்த தானம் பெற்றதால், அவர்களுக்கு, புதிய, பயங்கர, பிரச்சினை ஒன்று உருவாகியுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட இருவர்
டெல்லியிலுள்ள ஃபரிதாபாத் என்னுமிடத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருத்தியும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரும், தலசீமியா என்னும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அந்த 11 வயது சிறுமிக்கு எட்டு ஆண்டுகளாக தலசீமியா பிரச்சினை உள்ளது. அந்த இளைஞருக்கு 15 ஆண்டுகளாக அந்த அரிய பிரச்சினை உள்ளது.
இந்த தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் ஒரு விடயமாகும். ஆகவே, பாதிக்கப்பட்ட அந்த இருவருமே இரத்த தானத்தை நம்பியே வாழும் நிலை காணப்படுகிறது.
இரத்த தானம் பெற்றதால் உருவாகியுள்ள பயங்கர பிரச்சினை
விடயம் என்னவென்றால், முன்பின் தெரியாதவர்களிடம் இரத்த தானம் பெறுவதில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.
அதாவது, இரத்த தானம் கொடுக்கும் நபர், ஹெச் ஐ வி என்னும் பயங்கர தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரிடமிருந்து இரத்த தானம் பெறுபவருக்கு ஹெச் ஐ வி பாதிப்பு உருவாகிவிடும்.
ஆகவே, ஒருவர் இரத்த தானம் வழங்கும்போது, அவருக்கு ஹெச் ஐ வி, ஹெப்பட்டைட்டிஸ், சிபிலிஸ் போன்ற பாலுறவு மற்றும் இரத்த தானம் மூலமாக பரவும் நோய்கள் உள்ளனவா என அவரது இரத்தத்தை பரிசோதித்து, அவருக்கு அந்த பிரச்சினைகள் இல்லை என்றால் மட்டுமே அவர் தானம் வழங்கிய இரத்தத்தை தேவைப்படும் நோயாளி உடலில் செலுத்துவார்கள்.
பிரச்சினை என்னவென்றால், இந்த ஹெச் ஐ வி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடலில், சில மாதங்கள் முதல் சுமார் ஒரு ஆண்டு வரை, அறிகுறிகள் தோன்றாது. அந்த காலகட்டம், HIV window period என அழைக்கப்படுகிறது.
ஆக, அந்த window period காலகட்டத்திலிருக்கும் ஒருவருக்கு ஹெச் ஐ வி பிரச்சினை இருந்தாலும், வழக்கமாக இரத்த வங்கிகளில் மேற்கொள்ளப்படும் இரத்தப்பரிசோதனையில், அவருக்கு ஹெச் ஐ வி இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியாது.
ஹெச் ஐ வி தொற்றுக்கு ஆளாகியுள்ள நபருக்கு, Nucleic Acid Tests (NAT) என்பதுபோன்ற சிறப்பு பரிசோதனைகள் செய்தால் மட்டுமே ஹெச் ஐ வியின் ஆரம்ப கட்டத்திலேயே, அதுவும் தொற்றுக்கு ஆளான 10 முதல் 33 நாட்களுக்குள் அவருக்கு தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியும்.
பொதுவாக, வழக்கமான இரத்த வங்கிகளில் இந்த சிறப்பு பரிசோதன செய்யும் வசதிகள் இருப்பதில்லை.
ஆக, அப்படிப்பட்ட ஒரு நபரிடமிருந்து இரத்ததானம் பெற்றதால், அந்த சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் ஹெச் ஐ வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுமி கடந்த ஆண்டில் 15 முறை இரத்த தானம் பெற்றுள்ளாள். அந்த இளைஞர் 25 முறை இரத்த தானம் பெற்றுள்ளார்.
தலசீமியா பிரச்சினை உள்ளவர்களுக்கு, ஹெச் ஐ வி பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.
கடந்த ஆண்டுவரை இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இரத்தப்பரிசோதனை செய்தபோது, அவர்கள் இருவருக்குமே ஹெச் ஐ வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதால், ஏற்கனவே கவலையிலிருக்கும் அவர்களுடைய உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |