பிரித்தானியாவில் 2000 காவல்துறை அதிகாரிகள் மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு! வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
பிரித்தானியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பலாத்காரம், பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் உட்பட சுமார் 2,000 காவல்துறை மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாரா எவரார்டு சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது இந்த அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஆண் பொலிஸாருக்கு எதிராகவே உள்ளன.
தகவல் சுதந்திரச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த 2,000 அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்களில், 370-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கிட்டத்தட்ட 100 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் 18 குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆகியவை அடங்கும்.
இந்த குற்றச்சாட்டுகளில் 8 சதவீதம் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 43 பொலிஸ் படைகள் மீதான குற்றச்சாட்டில், 39 படைகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ளவை.
ஆனால், நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. வளாகத்தில் சக பெண் ஊழியருடன் உறவு கொள்வது, போதைப்பொருள் விற்பனையாளருடன் உறவில் ஈடுபடுவது மற்றும் இறந்த நபரிடம் இருந்து பணம் எடுப்பது உட்பட பல குற்றங்கள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலும் இவை இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு இடையிலான இந்த குற்றச்சாட்டுக்களில், 33 படைகளில் இதுவரை 514 நிரூபிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.