3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்
2027 ipl auction to be held in india: ஐபிஎல் ஏலத்தை 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடத்த ஐபிஎல் நிர்வாக குழு முன்வந்துள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலம்
உலக அளவில் நடைபெறும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பிசிசிஐ நடத்தி வரும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது.

வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு மெகா ஏலமும், ஆண்டுக்கு ஒருமுறை மினி ஏலமும் நடைபெறும்.
கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. அதன் பிறகு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.
2024 ஆம் ஆண்டு துபாயிலும், 2025 ஆம் ஆண்டு ஜெட்டாவிலும், 2026 ஆம் ஆண்டு அபுதாபியிலும் நடைபெற்றது.
இந்நிலையில், 2027 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முன்வந்துள்ளது.
மினி ஏலத்திற்காக ஐபிஎல் அணிகள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் உள்ள பயண சுமையை கருத்தில் கொண்டு, இந்தியாவிலே நடத்த ஐபிஎல் நிர்வாக குழு பரிசீலித்துள்ளது.
இந்தியாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை திருமண சீசன் என்பதால், அந்தக் காலகட்டத்தில் 5 நட்சத்திர ஹொட்டல்கள் கிடைப்பதைப் பொறுத்து ஏலம் நடைபெறும் நகரம் தேர்வு செய்யப்படும். இந்த ஏலத்திற்காக, பிசிசிஐக்கு ஓரிரு இரவுகளுக்கு 100க்கும் மேற்பட்ட அறைகள் தேவைப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐபிஎல் தலைவர் அருண் தூமல், "ஒவ்வொரு ஆண்டும், இதை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சிக்கிறோம், ஆனால் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் பருவம் என்பதால் எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.

எனவே, இந்த ஆண்டு ஏலம் சிறியதாக இருக்கும் என்பதாலும், இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், நிச்சயமாக இங்கே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், பல்வேறு வீரர்கள் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், அணிகளிடம் அது குறித்து கருத்து கேட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம் அந்த விதியை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளது.