ஒன்லைன் சூதாட்டம்..21 வயது மாணவருக்கு நேர்ந்த சோகம்
தமிழக மாவட்டம் மதுரையில் கல்லூரி மாணவர் ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது இளைய மகன் வினோத்குமார் (21), மதுரையில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
விடுதியில் தங்கி படித்து வந்த வினோத்குமார், நேற்று காலை கல்லூரிக்கு செல்லவில்லை. அவர் நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இந்த நிலையில் வினோத்குமாரின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை அறிந்த சக மாணவர், கதவை தட்டியும் திறக்காததால் பேராசிரியரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து விடுதி காப்பாளர், பேராசிரியர்கள் வந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வினோத்குமார் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
ஒன்லைன் சூதாட்டம்
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வினோத்குமார் ஒன்லைன் மூலம் சூதாடியது தெரிய வந்தது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எனினும் பொலிஸார் இதுகுறித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.