23 வயதில் 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி - சென்னையில் பணிபுரியும் பெண்ணின் சாதனை
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர், அரசுவேலைக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
பல லட்சங்களை செலவழித்து, பயிற்சி மையத்திற்கு சென்று படித்தாலும், ஆண்டுக்கு 0.5%பேர்களே அதில் தேர்ச்சி பெறுகின்றனர்.
ஆனால், இளம்பெண் ஒருவர் தனது 23 வயதிற்குள்ளாகவே 19 அரசுபணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
23 வயதில் 19 அரசுபணி தேர்வுகளில் வெற்றி
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த சாரு பாண்டே(charu pandey), SSC, SBI, RRB போன்ற 19 அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதற்காக வரும் சுதந்திர தினத்தில் ஜனாதிபதியால் தங்க மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்ட உள்ளார்.
சாரு பாண்டே மே 2025 முதல் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (CAG) சென்னை அலுவலகத்தில் உதவித் தணிக்கை அதிகாரியாக (AAO) பணியாற்றி வருகிறார்.
ஹேமசந்த் யாதவ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனது இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரும்போதே, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்தாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களின் மூலம் பாடங்கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ளார்.
சாரு பாண்டே
இது குறித்து பேசிய சாரு பாண்டே, "நான் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆசிரியராகவோ அல்லது பேராசிரியராகவோ ஆக வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினார்கள்.

ஆனால் நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். என் குடும்பத்தினரும் எனது முடிவுக்கு முழு ஆதரவு அளித்தனர்.
பள்ளியில், நான் கணிதத்தில் நன்றாக இருந்தாலும், மற்ற பாடங்களில் ஒரு சராசரி மாணவியாகவே இருந்தேன். இருப்பினும், வெற்றி என்பது திறமையால் மட்டும் வருவதில்லை, தொடர்ச்சியான கடின உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் வருகிறது என்று நம்புகிறேன்.
ஒரு தேர்வை எழுதிய பிறகு, அதைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதற்குப் பதிலாக, அடுத்த இலக்கில் கவனம் செலுத்துவேன். முதல் தகுதிப் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை என்றால், நிச்சயமாக இரண்டாவது பட்டியலில் இடம்பெறும்.
எந்தளவிற்கு நேரம் ஒதுக்கி படிக்கிறோமோ அதே அளவிற்கு ஓய்வும் அவசியம். நான் 10 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை நடைப்பயிற்சிக்குச் செல்வேன், அல்லது என் குடும்பத்துடன் 5 முதல் 10 நாட்கள் பயணம் செல்வேன்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முனைவர் பட்டம் (PhD) பெறவும், யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வுக்குத் தயாராகுவேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |